பெரம்பூர் ரயில் நிலைய நடைபாதையில் தீப்பொறி பறக்க கத்தியை தேய்த்து கல்லூரி மாணவர்கள் அருகில் இருப்பவர்களை மிரட்டும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், பேருந்து மற்றும் மின்சார ரயில்கள் மூலம் கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். அப்படி வரும் இவர்கள் தங்கள் கல்லூரியின் கெத்து என்னவென்பதை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக தேவையற்ற ரகளை மற்றும் பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ரூட்டு தல பிரச்சனைகள் இப்போது ரயில் நிலையங்களுக்கும் வந்துள்ளன.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு மாணவர்கள் தரப்பினர், பெரம்பூர் ரயில் நிலையத்தில் கற்களால் தாக்கி கொள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இந்தச் சம்பவம் தொடர்பாக 9 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது அதேபோல் ஒரு சம்பவம் காணொளியாக வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காணொளியில், ரயில் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் ஒரு மாணவர், அவர் வைத்திருக்கும் ஒரு பட்டா கத்தியால் பெரம்பூர் ரயில் நிலைய நடைபாதையில் தேய்த்தபடி செல்கிறார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் ரயிலில் மாணவர்கள் சிலர் கும்பலாக ஏறியதும், அவர்கள் ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும், தொங்கியபடியே நடைபாதையில் பட்டா கத்தியை தீட்டி ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காட்சிகள் வெளியாகி வைரலானதை அடுத்து, இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்ததில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தான் பட்டா கத்தியுடன் செல்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
chennai pachchaiyappan college students dangerously travelling in local train with swords. RPF detained some of them..
பட்டாக்கத்தியுடன் பயணம்.. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்..@tnpoliceoffl @abpnadu pic.twitter.com/qGZ952h1KG
— Krishna Kumar (@k_for_krish) September 23, 2022