சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க விரும்புவதாகவும் சீனாவில் இறக்க விருப்பமில்லை எனவும் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
திபெத்தின் புத்தமத தலைவரான தலாய் லாமா சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து தப்பி கடந்த 1959 ஆம் ஆண்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவருடன் அவரின் சீடர்களும், அரசு அதிகாரிகளும் இந்தியாவில் வந்து தஞ்சமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தலாய் லாமா அமெரிக்காவின் இளம் தலைவர்களை சந்தித்து உரையாடினர். அப்போது தலாய் லாமா, தனது இறப்பு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசிய நிகழ்வை நினைவுகூர்ந்து அதனை பகிர்ந்தார்.
“அடுத்த 15 – 20 ஆண்டுகள் நான் உயிரோடு இருப்பேன். அதில் கேள்விக்கு இடமில்லை. இறக்கும் நேரம் வரும்போது, நான் இந்தியாவையே தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. அதனால், அவர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன். இதற்கு மாறாக செயற்கைத்தனம் நிறைந்த சீன அதிகாரிகள் மத்தியில் இறக்க விரும்பவில்லை. சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என மன்மோகன் சிங்கிடம் கூறினேன்’ என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முகநூலில் வெளியிட்டுள்ள தலாய் லாமா காணொளியில், உண்மையாகவே வருந்தக்கூடிய நம்பிக்கையான நண்பர்கள் மத்தியில் தான் ஒருவர் உயிரிழக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.