தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையின் நீர் ஆதரங்களான செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
இதன் காரணமாக வரும் நாட்களிலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், ஏரிகளில் இருக்கும் தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்போது 20.64 அடி நீர்மட்டம் உள்ளது. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,180 கன அடியாக இருக்கிறது. கனமழை காரணமாக ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், இன்று பிற்பகல் 3 மணி அளவில் 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேபோல், 3300 மில்லியன் கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போதைய நீர் இருப்பு 2536 மில்லியன் கன அடியாக இருக்கிறது. இந்நிலையில் முழு கொள்ளவை எட்ட வாய்ப்பு இருப்பதால், இன்று பிற்பகல் வேளையில் 100 கன அடி திறக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், நீர்வரத்தின் அடிப்படையில் உபரிநீர் திறந்துவிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு