பயணி ஒருவருக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரத்தை வழங்கக் கோரி அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப்பேருந்து சார்ந்த குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. குறிப்பாக தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பேருந்துகளின் மேற்கூரை சரியில்லாத காரணத்தினால் மழை பேருந்திற்குள்ளும் பொழிகிறது. பயணிகளும் இதைச்சார்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நள்ளிரவில் பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகியதாக கூறி நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சோமசுந்தரம் புகார் மனுவை அளித்தார்.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நான் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் பயணம்செய்ய முன்பதிவு செய்திருந்தேன். அதன்படி, அல்ட்ரா டீலக்ஸில் பயணம் செய்யும்போது, நள்ளிரவில் பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகியது. இதனால், நான் மன உளைச்சலுக்கு உள்ளானதையும், உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் சோமசுந்தரத்துக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அச்சம்பவத்தில், அப்துல் அஜிஸ் என்ற மூத்த குடிமகன் சென்னை கோயம்பேட்டில் இருந்து வேதாரண்யம் செல்ல 9 டிக்கெட் முன்பதிவு செய்தார். ஆனால், அவருக்கு உரிய இருக்கைகள் வழங்கவில்லை.
இதனால், அப்துல் அஜிஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நின்று கொண்டே பயணம் செய்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு கொண்ட அப்துல் அஜிஸ் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
முன்பதிவு செய்த பயணிக்கு அதற்கான இருக்கை வழங்காதது தவறு என தண்டித்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.