காவல்துறை நுபுர் ஷர்மாவை குற்றவாளாக கருதவேண்டுமென கவன ஈர்ப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் இவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. மேலும் பல்வேறு புகார்கள் இவர் மீது கொடுக்கப்பட்டது. இதன்காரணமாக, பாஜக இவரை கட்சியிலிருந்து நீக்கியது.
நபிகள் நாயகம் குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தில்லிக்கு மாற்றக்கோரி நுபுர் ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, நுபுர் ஷர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அவதூறான கருத்து தெரிவித்தது தொடர்பாக விசாரனைக்கு நேரில் வருமாறு கடந்த மாதம் வெவ்வேறு தேதிகளில் நுபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கொல்கத்தா காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒரு நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அந்த நபர் வெளிநாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும்.