சென்னை: தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் (அக்டோபர் 29) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக,
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனீ, தென்காசி, ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் அக்டோபர் தொடக்கத்திலேயே ஆரம்பித்து நவம்பர் ,டிசம்பர் என மூன்று மாதங்கள் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை ,அண்மையில் வங்கக் கடலில் உருவான சிட்ரங் புயலால் தாமதமானதாகவும்,முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் நவம்பர் 4-ந் தேதி வரை நீடிக்கும் என்றும், இன்று துவங்கியுள்ள இந்த பருவமழையால், நவம்பர் 1-ந் தேதியில் இருந்து படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நவம்பர் 4-ந் தேதிக்கு பிறகு மழையின் தீவிரம் குறைந்து, பின்னர் மீண்டும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்குத் தடை – காரணம் என்ன?
சென்னையை பொருத்தவரை :
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை :
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 8 செ.மீ., மழையும், புதுச்சேரியில் 7 செமீ.,மழையும், கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,ஸ்ரீ முஷ்ணம் ,திருநெல்வேலி மாவட்டம் , நாங்குநேரி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., மலையும் பதிவாகியுள்ளது.
30.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனீ, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
31.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும்வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனீ, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
01.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02 .11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்ல.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – மலையில் ஏற கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியர்