திமுக ஆட்சிக்காலத்தில் எந்தவித பணிகளும் நடைபெற்வில்லை எனவும், அதிமுக ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட நிதியை தான் தற்போது பயன்படுத்தி வருவதாகவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரம் முதலே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனிடையே சென்னையின் புறநகர்ப் பகுதிகளான, திருவள்ளுவர் நகர், காவியா நகர், பெல்நகர், சிந்து காலனி, ராமமூர்த்தி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், வளர்மதி உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, காய் வகைகள், பால், ரொட்டி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் மழையை வைத்து அரசியல் செய்கிறேன் என்றால் ஸ்டாலின் செய்வது என்ன? மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் மக்கள் படகில் தான் செல்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவ முகாம்கள் கூட அமைக்கப்படவில்லை. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியிருப்பதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். சென்னையில் சொட்டுநீர் கூட தயங்கவில்லை என திமுக வெளியிடும் செய்தி உண்மைக்கு புறம்பானது.
திமுக ஆட்சிக்காலத்தில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட நிதியை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: சபரிமலை தரிசனம்: வரும் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்.,கட்டணம் எவ்வளவு தெரியுமா?