நேற்று நடந்த உலக குத்துச் சண்டை போட்டியில் 52கிலோ எடைப் பிரிவில் இந்தியாவினைச் சேர்ந்த நிகத் ஜரீன் தங்கம் வென்றுள்ளார்.
துருக்கி நாட்டிலுள்ள இஸ்தான்புல் மாகாணத்தில் உலக குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற்றன.
இதில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற நிகத் ஜரீன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தாய்லாந்தினைச் சேர்ந்த ஜிட்போங் ஜூடாமசினை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
உலக குத்துச் சண்டை போட்டிகளில் தங்கம் வெல்லும் வரிசையில் ஐந்தாவது நபராக நிகத் ஜரீன் சேர்ந்துள்ளார். இவருக்கு முன்னர் மேரி கோம், சரிதா தேவி, ஆர்.எல். ஜென்னி மற்றும் கே.சி.லேகா ஆகியோர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேரி கோமிற்கு அடுத்து இந்தியா அல்லாத பிற நாடுகளில் நடந்த உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையினையும் நிகத் பெற்றுள்ளார்.
12 எடைப் பிரிவுகள் கொண்ட குத்துச் சண்டை போட்டிகளில் ஐந்து பிரிவுகள் மட்டுமே ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும், மூன்று பிரிவுகள் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வீர்கள்/வீராங்கனைகள் தங்களது உடல் எடையினை மாற்றிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சென்ற ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நிகத் ஜரீன் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
1996ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தெலங்கானாவில் உள்ள நிசாமாபாத் நகரினில் பிறந்த நிகத்திற்கு குத்துச் சண்டை அவரது தந்தையின் மூலம் அறிமுகமானது.
அவரது தந்தை முஹம்மத் ஜமீல் அகமதிடம் ஒரு வருடம் பயிற்சி எடுத்த பின்பு விசாகபட்டினத்திலுள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சிக்காக 2009ம் ஆண்டு சேர்ந்தார்.
அதற்கு அடுத்த ஆண்டே தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் நடந்த தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் சிறந்த குத்துச் சண்டை வீரருக்கான பரிசினையும் இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகத் ஜரீன் கடந்து வந்த பாதை..
2011ம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற இளையோருக்கான குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
2014ம் ஆண்டு இளைஞர்களுக்கான உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
அதே ஆண்டு செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் ரஷ்ய வீராங்கனையினை வீழ்த்தி தங்கம் வென்றார்.
2015ம் ஆண்டு 16வது மூத்தோருக்கான தேசிய குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்றார்.
2019ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
2022ம் ஆண்டு பல்கேரிய நாட்டில் நடைபெற்ற 73வது ஸ்டராண்ட்ஜா நினைவு குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்றார். அரையிறுதியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற துருக்கிய வீராங்கனையினை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2022ம் ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
ட்விட்டரில் பிரபலமாக இருக்க வேண்டும் என்பது எனது கனவுகளில் ஒன்று எனக் கூறியிருந்த நிகத் போட்டி முடிந்ததும் ‘நான் ட்விட்டரில் பிரபலமாகி விட்டேனா?’ என்றும் கேட்டுள்ளார்.
உலக அளவில் இந்தியாவிற்காக பங்கு பெற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்று கூறியிருந்த நிகத் தற்போது இந்தியாவிற்காக ஒரு பதக்கத்தினை வென்றுள்ளார்.
ட்விட்டர் மட்டுமல்லாது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் நிகத் ஜரீனிற்கு இந்தியாவின் பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், மக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
நிகத்தின் வெற்றி குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவரது அன்னை ‘நிகத் குறித்து நன் மிகவும் பெருமைப் படுகிறேன். கடவுளுக்கு நன்றி. கட்டாயம் நிகத், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவார்’ என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
காதல் டூ கல்யாணம்: இனி ஆதியும் நிக்கி கல்ராணியும் தம்பதிகள்!