நைஜீரியாவில் தேவாலயத்தில் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 50 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். மேலும், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
துப்பாக்கியுடன் வந்தவர்கள் தேவாலய கட்டடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி சுட்டதாக ஓண்டோ மாநில காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை என, ஒண்டோ மாநில ஆளுநர் தெரிவித்து உள்ளார். தாக்குதல் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்களையும் அவர் பார்வையிட்டார்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்த அபயோமி என்பவர் கூறுகையில், ‘நான் அந்த வழியாக சென்ற போது சர்ச்சுக்குள் துப்பாக்கிச்சூடு சத்தமும், வெடிச்சத்தமும் கேட்டது. அப்போது 5 பேர் துப்பாக்கியுடன் இருப்பதை கண்டேன்’ என தெரிவித்துள்ளார். தாக்குதலில், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அந்நாட்டு அரசு இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை.
எனினும் இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர். தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மேலும், நைஜீரியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான முன்னாள் ராணுவ தலைவர் முகம்மது புகாரிக்குப் பதில் வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளும் ஏபிசி கட்சி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இந்த சூழலில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதால், இதன் பின்னணி குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
வருங்கால பிரதமரே: அண்ணாமலையை சூடேற்றும் காயத்ரி ரகுராம்!