கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கொள்முதல் செய்வதில் ரூ.77 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டிற்கு, ஆவின் பாலில் டீ,காபி தான் போட முடியும்..! ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க முடியாது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
நடந்தது யாதெனில்…
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “கர்ப்பிணிகளுக்கான கிட்டில் இரண்டு பொருட்களைத் தனியாரிடம் வாங்கியதால், அரசுக்கு ரூபாய் 77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹெல்த் மிக்ஸை ஆவினுக்கு பதில் தனியாரிடம் வாங்குவதால் மட்டும் அரசுக்கு ரூபாய் 45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கான தொகுப்பில் ரூபாய் 77 கோடி இழப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தர வேண்டும் என கூறியிருந்தார். இந்தப் புகார் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், DPH இயக்குனர் செல்வ விநாயகம் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொடர்பாக தங்களது விளக்கங்களை தெரிவித்தனர். அதில், 2018 முத்துலட்சுமி மகப்பேறு திட்டம் துவங்கப்பட்டது. அதன் மூலம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கவும், அதில் 10% ஊட்டச்சத்து பொருட்களாக வாங்கி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்காக 450கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, ஆனால் கொரோனா காலமாக இருப்பதால் வாங்கப்படவில்லை, இந்த தொகை மீண்டும் அரசுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர் ஆவினில் உள்ள பால் மூலம் தயாரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது, கர்ப்பிணிகளுக்கு பொருத்தமானதாக இருக்காது, ஆவின் பால் மூலம் டீ,காபி தான் போடப்படும், ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரிக்க முடியாது என தெரிவித்தார். சந்தை விலையை விட குறைவான விலைக்கு தான் அரசு கொள்முதல் செய்கிறது என்றும் இதற்காக 11 உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஹெல்த் மிக்ஸ்
ஹெல்த் மிக்ஸ் பொருளில் 32 சத்துக்கள் உள்ளடக்கியதாக உள்ளது, இந்த பொருட்கள் ஆவினில் தயாரிக்க முடியுமா என்று ஆவின் நிறுவனத்துடன் 2 ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆவின் தயாரிக்கும் பால் பொருட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதா என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. இதனை ஆய்வக்கத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை அரசுக்கு சமர்பிக்க வேண்டும் அதன் பிறகு அரசு முடிவு செய்யும். இதற்கான டெண்டர் இன்னும் துவங்கவில்லை என பொதுசுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கர்ப்பிணிகளுக்கான ஹெல்த் மிக்ஸ் குற்றச்சாட்டு ஆப்பிளையும் – எழுமிச்சையையும் ஒப்பிடுவது போன்ற குற்றச்சாட்டு என தெரிவித்தார்.
ஹெல்த் மிக்ஸ் பவுடர் சந்தை விலை – ரூ. 588. கொள்முதல் விலை – ரூ 460.50 இதற்கு இடையில் வித்தியாசம் – ரூ127.50 என கூறினார். அயன் சிரப் சந்தைவிலை – ரூ 112, கொள்முதல் விலை – ரூ 74.60,வித்தியாசம் – ரூ. 37.35 உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அடுத்ததாக பேசிய சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது, “கிட்டத்தட்ட 32 பொருட்கள் அடங்கிய ஒரு தயாரிப்பு தான் இந்த ஹெல்த் மிக்ஸ். இதனை வெறும் புரோட்டீன் என்று மட்டுமே சொல்ல முடியாது. கர்ப்பிணி பெண்களுக்கு என்ன மாதிரியான அடிப்படை ஊட்டச் சத்துகள் தர வேண்டும் என ICMR பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என அவர் பேசினார்.
இதை செய்தால் இனி நன்மைதான்; மேஷம் முதல் கன்னி வரையிலான வார ராசிபலன்கள் இதோ!