Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கால்நடை வளர்ப்போருக்கு வரி: சுற்றுச்சூழலை காக்க நியூசிலாந்து அதிரடி அறிவிப்பு!

    கால்நடை வளர்ப்போருக்கு வரி: சுற்றுச்சூழலை காக்க நியூசிலாந்து அதிரடி அறிவிப்பு!

    கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அதிர்ச்சி அடையும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது நியூசிலாந்து அரசு. ஆடு மற்றும் மாடுகளை வளர்ப்போருக்கு வரி விதிக்கும் திட்டம் தான் அது. எதற்காக ஆடு, மாடு வளர்த்தால் வரி விதிக்க வேண்டும்? அப்படியென்றால் ஆடு, மாடுகளை வளர்க்க கூடாதென நியூசிலாந்து அரசு நினைக்கிறதா என்றால், அது தான் இல்லை.

    அதாவது, பசுமை இல்ல வாயுக்களில் முதன்மையான மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்தும் முயற்சிக்காக செம்மறி ஆடுகள், மற்றும் மாடுகளை வளர்ப்போருக்கு வரி விதிக்கும் திட்டத்தை நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளிடம் இருந்து வெளிவரும் மீத்தேன் வாயுவுக்கு வரி வசூலிக்கும் திட்டத்தை அமல்படுத்தும் முதல் நாடு இதுதான்.

    கிட்டத்தட்ட 50 இலட்சம் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டில், சுமார் ஒரு கோடி கால்நடைகள் மற்றும் 2.6 கோடி செம்மறி ஆடுகள் உள்ளன. நாட்டில் வெளியேற்றப்படும் மொத்த பசுமை இல்ல வாயுக்களில், ஏறக்குறைய பாதியளவு விவசாயத்தில் இருந்து தான் வருகிறது. இதில் வெளியாகும் முக்கியமான வாயு மீத்தேன்.

    இந்தத் திட்டத்தின் படி, வருகின்ற 2025 ஆம் ஆண்டு முதல் கால்நடைகளின் வாயு வெளியேற்றத்திற்கு, விவசாயிகள் பணம் செலுத்த வேண்டும். தீவனச் சேர்க்கைகள் மூலம் உமிழ்வைக் குறைக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். அதே சமயம், பண்ணைகளில் மரங்களை நடுவதன் மூலம் உமிழ்வை ஈடுகட்டலாம்.

    வரிவிதிப்புத் திட்டம்..

    இந்த வரிவிதிப்புத் திட்டத்தை உண்மையில் யார் செயல்படுத்துகிறார்கள் என இன்னும் சரியாக செதுக்கப்பட வேண்டும். ஆகவே, அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய விஷயங்களை முடிவு செய்யவேண்டியுள்ளது என, பால் உற்பத்தியாளரும், நியூசிலாந்து விவசாயிகள் கூட்டமைப்பின் தேசியத் தலைவருமான நிஆண்ட்ரூ ஹோகார்ட் கூறினார்.

    இத்திட்டத்தின் மூலம் திரட்டப்படும் பணம், விவசாயிகளுக்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ஆலோசனை சேவைகளில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என நியூசிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பசுமை இல்ல வாயுக்களில், கரியமில வாயுவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது மீத்தேன் வாயு தான். மனித நடவடிக்கைகளால் ஏற்படும் தற்போதைய வெப்பமயமாதலில், மூன்றில் ஒரு பங்குக்குப் பொறுப்பாக சக்திவாய்ந்த வாயு மீத்தேன் உள்ளது. ஒற்றைக் கரிம வாயுவின் மூலக்கூறுகளை விடவும், தனிப்பட்ட மீத்தேன் மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் சக்தி வாய்ந்த வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்துகிறது.

    26-வது காலநிலை உச்சி மாநாடு கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 2030 ஆம் ஆண்டுக்குள் வாயு வெளியேற்றத்தை 30% குறைக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொண்டது. நியூசிலாந்து உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளும் இந்த புது முயற்சியில் கையெழுத்திட்டுன.

    சுமார் 40% மீத்தேன், சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கை மூலங்களில் இருந்து வருகிறது. ஆனால், கால்நடைகள் மற்றும் அரிசி உற்பத்தி போன்ற விவசாயச் செயல்பாடுகள் முதல் குப்பைக் கிடங்குகள் வரையிலான மனித நடவடிக்கைகளில் இருந்து, தற்போது அதிக அளவில் மீத்தேன் வாயு வெளிவருகிறது. இருப்பினும், பூமியைச் சூடாக்கும் பணியை மீத்தேன் திறம்படச் செய்து கொண்டிருக்கிறது. 100 ஆண்டு காலத்தில் இது கரியமில வாயுவைவிட 28 முதல் 34 மடங்கு வரை அதிக வெப்பமாக்கக் கூடியது என்பது ஒன்றே தற்போது விஞ்ஞானிகளின் கவலையாக உள்ளது. 20 ஆண்டுகளில், கரியமில வாயுவை விட 84 மடங்கு அதிக வெப்பமாக்கும் ஆற்றல் வாய்ந்தது மீத்தேன்.

    இதன் காரணமாக, மீத்தேன் வாயுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கால்நடை வளர்ப்பவருக்கு வரிவிதிப்புத் திட்டத்தை அமல்படுத்த நியூசிலாந்து அரசு முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு, விவசாயிகளுக்கு கடினமாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என நியூசிலாந்து அரசு தரப்பு கூறுகிறது.

    காவல் வாகனத்தின் மேல் ஒரு உல்லாசப்பயணம் சென்ற வாலிபர்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....