விண்வெளியில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மூன்று விசித்திரமானப் பொருட்கள் விழுந்துள்ளன. இது மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளியில் இருந்து எரிகல் விழுவது தான் நாம் அறிந்தது. ஆனால், நமது வியப்பையும் தாண்டி உலோகப் பந்து வடிவிலானப் பொருட்கள் பூமியில் விழுந்துள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் பலேஜ், கம்போலாஜ் மற்றும் ராம்புரா ஆகிய மூன்று இடங்களில் உலோகப் பொருட்கள் விண்வெளியில் இருந்து விழுந்துள்ளது.
முதல் உலோகப் பந்தானது நேற்று மாலை 4.45 மணியளவில் விழுந்துள்ளது. சிறிது நேரத்திலேயே மற்ற இரண்டு உலோகப் பொருட்கள் விழுந்துள்ளன. இதனை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து சென்றனர். பாலேஜ் மற்றும் ராம்புரா ஆகிய இடங்களில் திறந்த வெளியில் உலோகப் பொருட்கள் விழுந்துள்ளன.
ஆனால் கம்போலாஜில் மட்டும் ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இருப்பினும் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. இதைப் பார்த்த மக்கள், என்னவென்று தெரியாமல் முழித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்னனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த உலோகப் பொருட்களை மீட்டு, தடய அறிவியல் ஆய்வகத்திடம் ஆய்வு செய்ய கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்வைப் பார்த்த பொதுமக்கள் கூறியது, பெரும் சத்தத்துடன் அந்த பொருள் விழுந்ததாகவும் ஆனால் அந்த பொருள் என்னெவென்று எங்களுக்கு தெரியவில்லை என்றும் கூறினர்.
விழுந்த உலோகப்பந்து 5 கிலோ எடையை கொண்டது ஆகும். மேலும், மூன்று கிராமங்களுக்கும் இடையில் சுமாராக 15 கி.மீ தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உலோகப் பொருட்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பொருட்கள் செயற்கைக்கோளின் குப்பையாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.