மறைந்த திமுக எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் பேத்தி தான் ப்ரியா. சென்னை மாநகராட்சித் தேர்தலில், 200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் 153 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வென்றனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். ஆகையால், மேயர் பதவி பெண்ணுக்கு என ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் ப்ரியா மேயர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.
இன்று மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் , துணைத் தலைவருகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட ப்ரியா வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் மேயருக்கான உடை அணிந்து அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் கைகளிலிருந்து செங்கோலைப் பெற்றுக்கொண்டார்.
பதவி ஏற்றபின் ப்ரியா அளித்த பேட்டியில் “ மேயர் பதிவிக்கு தேர்வான போது இது கனவா நெனவா எனத் தோன்றியது. முதல்வர் ஸ்டாலின் தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார். அதனால் அவரின் நம்பிக்கை வீண் போகாதபடி நிச்சயம் நான் உழைப்பேன். என் முதல் திட்டம் சென்னையில் நான் மட்டுமல்ல எல்லோரும் சந்திப்பது மழை வெள்ளப் பிரச்சனை தான், அதற்கு தீர்வு காண முயற்சி எடுப்பேன். சென்னையில் காற்று மாசு அதிகமாகி வருகிறது. அதை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்” என்று பெருமிதமாக கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற இளம் வயது பெண் மேயர் ப்ரியா சென்னை மாநகராட்சிக்கு கிடைத்துள்ளதாக மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தும் வாழ்த்துக்களைக் கூறியும் வருகின்றனர்.