கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு, கட்சிகளின் திட்டங்கள் வெளியீடு, வாக்கு சேகரிப்பு, கட்சிகளுக்கு இடையேயான போட்டிகள், விமர்சனங்கள், பணப்பொருட்கள் விநியோகித்தல் என பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமில்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரைகள் சென்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்ததில் இருந்து தமிழகத்தின் மாநகராட்சிகளும், நகராட்சிகளும், பேரூராட்சிகளும் தொடர்ந்து பரபரப்பாகவே இருந்து வந்த நிலையில், கடந்த பத்தொன்பதாம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
மக்களை வாக்குச்செலுத்த வைக்க தேர்தல் ஆணையம் அந்தந்த மாநகராட்சிகளின் வாயிலாக, நகராட்சி, பேரூராட்சிகளின் வாயிலாக, இன்னும் சில நூதன முறைகளாக வாக்களர்களிடத்தில் வாக்கு செலுத்துதல் குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டனர்.
இப்படியாக வாக்குப்பதிவு நடந்து முடிய, இன்று வாக்குகள் எண்ணும் பணி காலையில் இருந்து தொடங்கியது. வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆளுங்கட்சியான திமுகதான் பல இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, திராவிட முன்னேற்ற கழகம் 21 மாநாகராட்சிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமாக உள்ள 138 நகராட்சிகளில் திராவிட முன்னேற்ற கழகம் 132 இடங்களிலும், அஇஅதிமுக 3 இடங்களிலும் பிறவைகள் மூன்றும் முன்னிலை வகித்து வருகின்றன. பேரூராட்சிகள் திமுக 391 இடங்களிலும், அதிமுக 19 இடங்களிலும், பிஜேபி 16 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்திலும் மற்றவைகள் 29 பேரூராட்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது.