தமிழகத்தில் மிகவும் பரபரப்பாய் நகர்ந்து வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த பத்தொன்பதாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் சுயேட்சையாக களம் கண்டது.
இதற்கு முன்னம் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் 129 இடங்களில் வெற்றி வாகை சூடியது. உள்ளாட்சி தேர்தல்களில் கிடைத்த வெற்றியின் நம்பிக்கையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் இயக்கம் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாண்மையான இடங்களில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கிறது.
இப்படியான சூழலில், விஜய் மக்கள் இயக்கம் தற்போது வரை 4 வார்டுகளில் வென்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை சமூக வலைத்தளங்களில் விஜய் இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ் அவர்களும், குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் அவர்களும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 16-வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன் அவர்களும் புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் போட்டியிட்ட பர்வேஷ் முகமது அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.