கேரள மாநிலம் குருவாயூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக பிரபல யூடியூபர் கிரண் ஆனந்த் தேர்வாகியிருக்கிறார்.
கிரண் ஆனந்திற்கு 34 வயது. இவர் ஆயூர்வேத மருத்துவர் மற்றும் மனைவியுடன் இணைந்து யூ-டியூப் சேனல் தொடங்கி புகழ்பெற்றவர். இப்படியாக புகழ்பெற்றவர் தற்போது குருவாயூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக தேர்வாகியிருக்கிறார்.
கிரண் ஆனந்த் கடந்த ஆறு ஆண்டுகளாக மாஸ்கோவில் ஆயுர்வேத மருத்துவப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேலும், இவர் தனது தந்தை குருவாயூர் கோயிலில் பூஜைகளை மேற்கொண்டு வந்த நிலையில், வயோதிகம் காரணமாக அவரால் பூஜைகளை மேற்கொள்ள முடியாமல் போனதும், மாஸ்கோவிலிருந்து திரும்பி, தந்தையுடன் இணைந்து கொண்டார் கிரண்.
இவர் நடத்தி வரும் ஹார்ட் டியூஸ் ஹார்ட் என்ற உடல்நலம் தொடர்பான யூ-டியூப் சேனலில், கலை, தொழில்நுட்பம், சுற்றுலா என பல விடியோக்கள் இடம்பெற்றுள்ளன. மேல்சாந்தியாக தனது பொறுப்பு நிறைவடைந்ததும், குருவாயூரிலேயே ஆயுர்வேத மருத்துவமனைத் தொடங்கவும் கிரண் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து கிரண் ஆனந்த் கூறியதாவது:
குருவாயூர் கோயிலில் மிக முக்கிய வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகளை செய்யும் நான்கு ஒத்திகன் குடும்பங்களில் நான் ககட் மனாவைச் சேர்ந்தவன். எனது தந்தையுடன் சேர்ந்து இதுவரை பல சிறப்பு வழிபாடுகளை குருவாயூர் கோயிலில் செய்திருக்கிறேன்.
கோயில் மேல்சாந்தியாக நான் என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக செய்வேன். இந்த புதிய பொறுப்புகள் மூலம், நான் கடவுளுக்கு இன்னும் ஒரு படி அருகே அழைக்கப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு கூறினார்.
கேரள குருவாயூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக பிரபல யூடியூபர் கிரண் ஆனந்த் தேர்வாகியிருக்கும் நிகழ்வு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.