லதா மீதான பண மோசடி வழக்கில், கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2014-ம் ஆண்டு கோச்சடையான் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர், அபிர்சந்த் என்பவரிடமிருந்து சுமார் ரூ. 6.2 கோடி கடனாக பெற்றார். இந்த கடனை அவர் பெறும் போது லதா ரஜினிகாந்த் உத்திரவாத கையொப்பமிட்டார். ஆனால், முரளியோ இந்த கடனை திரும்பக் கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கர்நாடகா முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்தப்பின், கர்நாடகா காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி லதா ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. ‘எனவே அவர் மீதான வழக்கில் இருந்து மூன்று பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.இருப்பினும் அவர் மீதான இந்திய தண்டனை சட்டம் 463 பிரிவின் படி, ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்ததற்காக கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்தலாம்’ என உத்தரவிட்டது.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. லதா மீதான பண மோசடி வழக்கில், கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், கர்நாடகா அரசு மற்றும் எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டனர்.