நுபுர் ஷர்மா வழக்கு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சியில், இறைத் தூதர் நபிகள் நாயகம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கடந்த 1-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜே பி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது நீதிபதிகள், “நுபுர் ஷர்மா நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டரில் சில கருத்துகளை பதிவிட்டார்.
அப்பதிவில், நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைத்ததற்காக, முகம் மட்டுமல்ல, உடலும் மன்னிப்பு கேட்க வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மாவின் ட்விட்டர் பதிவில், “சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் அகிலேஷ் யாதவ் மீது அவசர நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தன்னை ஒரு கட்சியின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் நுபுர் சர்மாவை தாக்க மக்களை தூண்டுகிறார். இவர் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க மாண்புமிகு சுப்ரீம் கோர்ட்டை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
நுபுர் ஷர்மாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு!