தேசிய விளையாட்டு தினம் மற்றும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேசிய விளையாட்டு தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், ஆக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரரான மேஜர் தியான சந்த் என்று அறியப்படும் தியான சிங்கின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.
ஆக்கி விளையாட்டில், ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்களை வெல்ல உதவியவர் தியான் சந்த். இதன்படி அவர் 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு பெரும் பங்காற்றினார்.
1979-ம் ஆண்டு தியான சந்த் மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தில்லி தேசிய விளையாட்டு அரங்கம் பின்பு, மேஜர் தியான சந்த் விளையாடடு அரங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. அவரை கவுரவிக்கும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தியான சந்த் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தேசிய விளையாடடு தினம் மற்றும் மேஜர் தியான சந்த் பிறந்த நாளை முன்னிட்டு, எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விளையாட்டுகள் சமீபத்திய ஆண்டுகளில் மிக சிறந்த ஒன்றாக உள்ளன. இந்த நிலை தொடர வேண்டும். நாடு முழுவதும் விளையாட்டு பிரபலமாக வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.