‘ஆசைகளை பிள்ளைகளிடம் சொல்லலாம், வழிகாட்டலாம் ஆனால், திணிக்க கூடாது’ என “நான் முதல்வன்” – திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
“நான் முதல்வன்”-மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா இன்று சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக இளைஞர்களை அவர்களின் தனித் திறமைகளில், தலைசிறந்து நிற்க வைக்க தமிழக அரசால் தொடங்கிவைக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
நான் மட்டும் முதல்வன் அல்ல, அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வர வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
இது என்னுடைய கனவு திட்டம். அந்தத் திட்டம் எனது கண் முன்னாள் மாபெரும் வளர்ச்சி அடைந்து வருவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் என்ற உள்ளதோடு உங்கள் முன்னாள் நிற்கிறேன்.
இளைஞர்களை ஊக்கப்படுத்தக் கூடிய வகைகளில் அமைக்கப்பட்டது தான் இந்த நான் முதல்வன் திட்டம்.
பல்வேறு துறை சார் படிப்புகளை பற்றியும் மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் ஆசைகளைப் பிள்ளைகளிடம் சொல்லலாம், வழிகாட்டலாம். ஆனால், திணிக்க கூடாது. பெற்றோர்களின் ஆசைக்காக மாணவர்கள் படிப்புகளில் சேருகிறார்கள். இதனால், அவர்களின் படிப்புகளில் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை.
தங்களது பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான படிப்புகளில் ஆர்வம் இருக்கிறது என கேட்டு அதன் பிறகு படிக்க வையுங்கள். அதற்காகத் தான் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற பெயரில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.