இன்று ஒருநாள் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை 465 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட்-28) அதிகாலையில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கிடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அச்சமயத்தில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நிஷாந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் நிஷாந்த், ஆண்டி, கருணாநிதி, உலகநாதன், சூசைவியாகுலம், ஜேசு ஆகிய 6 மீனவர்களையும் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், 6 பேரும் சட்ட விரோதமாக இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் வழக்குப் பதிவு செய்து தலைமன்னார் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.
இதை அடுத்து, ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற படகுடன் 6 மீனவர்களை சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் நீரிணை பகுதியில் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை கண்டித்தும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று ஒருநாள் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.