கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அங்கு கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மலையோர கிராமங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ஆகவே மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும், இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேரள மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, கனமழை காரணமாக குடையாத்தூர் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள ஒரு வீடு முற்றிலும் மண்ணில் புதைந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கனமழை தொடர்வதால் நிலச்சரிவு ஏற்படும் அச்சம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.