கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
கோவை கார் வெடிப்பு சம்பவம் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இவரின் திட்டங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதுகுறித்த விசாரணை தற்போது தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா வயது 25, முகமது அசாருதீன் வயது 23, முகமது ரியாஸ் வயது 27, பெரோஸ் இஸ்மாயில் வயது 27, முகமது நவாஸ் இஸ்மாயில் வயது 26, அப்சர்கான் வயது 28 ஆகிய 6 நபர்களை கைது செய்து சட்டவிரோத செயல்களை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இதன்படி சென்னையில், பெரம்பூர், புதுப்பேட்டை, மண்ணடி, வண்ணாரப்பேட்டை, ஜமலாயா ஆகிய 5 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
அதேபோல் கோவை மாவட்டத்தில் கோட்டைமேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்னகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் மற்றும் நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: பாழடைந்த கிணறு.. 40 அடி ஆழம்; தவறி விழுந்த பெண்ணின் கதறல் கேட்டு பொதுமக்கள் செய்த செயல்