உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலக கோப்பை தொடரில் தற்போது இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் இப்போட்டியானது இப்போட்டியானது, இன்று அடிலெய்ட் மைதானத்தில் மதியம் 1.30 மணியளவில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி பேட்டிங்கில் களம்கண்டது. ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இன்றைய போட்டி சிறப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கையில், இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்பு, விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் சற்று நிதானமாக விளையாடினார்கள். சிறிது சிறிதாக மட்டுமே ஸ்கோர் சேர்ந்த நிலையில், ரோஹித் சர்மா 27 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். விராட் கோலி-சூர்யகுமார் யாதவ் பார்ட்னர்ஷிப் சிறப்பாக விளையாடும் என எண்ணுகையில், சூர்யகுமார் யாதவ் 14 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்பு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா கோலியுடன் இணைந்து மெல்ல மெல்ல ஸ்கோரை உயர்த்தினார்.
அதிரடி எதுவும் பெரிய அளிவில் காட்டப்படாமல் மெதுவாகவே ஸ்கோர்கள் உயர்ந்தது. விராட் கோலி 40 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்து வெளியேற அணியின் ஸ்கோர் 136-ஆக இருந்தது. இதன்பின்பு களமிறங்கிய ரிஷப் பந்த் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். தமிழக வீரர் அஸ்வின் களத்திற்கு வந்தார். இதனிடையே பாண்டியா தனது வேகத்தை கூட்டினார். கடைசி ஓவரில் பாண்டியா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் ஆனார்.
மொத்தத்தில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. தற்போது இங்கிலாந்து அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் ஹல்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே மிகவும் அசத்தலான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இந்திய பந்துவீச்சாளர்களின் முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை. அதிரடி ஆட்டத்தை மிகவும் அமைதியான முறையில் இரு பேட்ஸ்மென்களும் வெளிப்படுத்தினர். இருவருமே அரைசதம் கடக்க, ஆட்டத்தின் போக்கு துளிக்கூட இந்திய அணியின் பக்கம் சாயவில்லை.
அக்சர் படேல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 34 ரன்களையும், அர்ஷ்தீப் சிங் 2 ஓவர்களை வீசி 15 ரன்களையும், தமிழக வீரர் அஸ்வின் 2 ஓவர்கள் வீசி 27 ரன்களையும், புவனேஷ்வர்குமார் 2 ஓவர்கள் வீசி 25 ரன்களையும் முகமது ஷமி 3 ஓவர்களை வீசி 39 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.
இறுதியில், ஒரு விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜாஸ் பட்லர் 80 ரன்களுடனும், அலெக்ஸ் ஹல்ஸ் 86 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 13-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதையும் படிங்க: கார் வெடிப்பு சம்பவம்: கோவையை சல்லடை போடும் புலனாய்வு முகமை..! 45 இடங்களில் அதிகாரிகள் சோதனை