நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜூன் 8-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
நாடு விடுதலைக்கு முன்னர் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம், ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகி வந்தது. இப்பத்திரிகை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.
பின் 2010-ல் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா, ராகுல் வசம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஜூன் 8-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அபிசேக் சிங்வி கூறுகையில், சோனியா 8 ம் தேதி ஆஜராவார். ராகுல், இங்கு இருந்தால், அன்றைய தினம் நேரில் ஆஜர் ஆவார். இல்லை என்றால் வேறு தேதி கேட்டு கோரிக்கை வைப்பார் எனக்கூறினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது: நாட்டின் விடுதலைக்கு எந்த பங்களிப்பும் செய்யாத கட்சி பாஜக. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை இலக்கு வைத்து நாட்டு விடுதலைக்குப் போராடிய தியாகசீலர்களை பாஜக அவமதிக்கிறது.
1942-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் அப்பத்திரிகைய ஒடுக்கியது. இப்போது அதே ஒடுக்குமுறையை அமலாக்கப் பிரிவு உள்ளிட்டவை மூலம் மோடி அரசு ஏவிவிடுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக அரசின் இந்த போக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார் சுர்ஜிவாலா.
இந்தியாவின் ஆறாத வடுவாக மாறிய ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்; பலியான 3000 பேர்! – நடந்தது என்ன?