இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதத்திலிருந்து நடைபெற்று வருகின்றன. பத்து அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த ஐபிஎல் ஆட்டத்தின் இறுதிப்போட்டியானது மே 21 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.
இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளும் போராடி வருகின்றன. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி பளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 59வது ஐபிஎல் போட்டி வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறாத் தொடங்கியது.
சென்னை அணி :
சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டீவோன் காண்வே முதல் பந்தில் எல்பிடபுள்யூ மூலம் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக ருத்துராஜ் கைக்கவாட் 6 பந்துகளை எதிர் கொண்டு 7 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு முறையே 1,10 ரன்களில் அவுட் ஆகினர். இதன் பின்னர் வந்த அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி 33 பந்துகளை 36 ரன்கள் (4 ஃபோர், 2 சிக்ஸர்) எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
ஒரு பக்கத்தில் தோனி நிலைத்து ஆடினாலும் மற்றொரு பக்கத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்ததால், சென்னை அணி 15.6 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சென்னையில் அதிகபட்சமாக தோனி , பிராவோ ஜோடி 29 பந்துகளுக்கு 39 ரன்கள் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் டேனியல் சாம்ஸ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜாஸ்ப்ரித் பும்ரா மற்றும் ராமந்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்து தனது மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்தது. இந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 32 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்கள் (4 ஃபோர்கள்) அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்.
திலக் வர்மா, ஷோகீன் ஜோடி 47 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்கள் அடித்து அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
முகேஷ் சௌதாரி 3 விக்கெட்டுகளையும், சிமர்ஜீத் சிங்க் மற்றும் மொயின் அலி ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.
16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த டேனியல் சாம்ஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு தகர்ந்துள்ளது.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் நடைபெறாத வினோத சம்பவம் , இப்போட்டியில் நடந்துள்ளது. இந்த போட்டி ஆரம்பித்த சில ஓவர்களுக்கு கரண்ட் கட் ஆனதால் டிஆர்எஸ் எடுக்க முடியாமல் போனது. இந்த சம்பவத்தினைப் பற்றி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஐக்கிய அமீரகத்தின் முதல் பெண் இயக்குனரான நைலா அல் கைஜா-வுடன் கூட்டணி அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!