முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் படத்தைத் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களை அவர் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக தமிழில் அவர் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அண்மைகாலங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தங்களை மொழி சார்ந்த நிறுவனம் என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பம் இல்லை எனவும், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இந்திய பார்வையாளர்களை அர்த்தமுள்ள கதைகள் மூலம் சென்றடைவதே தங்களின் முன்னுரிமை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷியின் எழுத்தில் திரைப்படம் உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டெழுமா ஆஸ்திரேலியா? டி20 உலகக்கோப்பையில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்துடன் இலங்கையுடன் மோதல்