மாமல்லபுரத்தில் நேற்று கடல் உள்வாங்கியதால் அங்கு, பழைய சிற்பங்கள் நன்கு வெளியில் தெரிந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
மாமல்லபுரம், தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுலாத்தளமாகும். தமிழக பாரம்பரியத்தையும் கட்டிடக்கலைகளையும் உலகுக்கு பறைசாற்றக் கூடிய அழகான பகுதியாகும். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். சென்னையிலிருந்து தெற்கே 62 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மாமல்லபுரம்.
மாமல்லபுரத்தின் கட்டிடமானது கிபி. 8 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பல்லவ மன்னன், நரசிம்மவர்ம பல்லவன் என்பரால் கட்டமைக்கப்பட்டது. இங்கு குடைவரைக் கோயில்களும் சிற்பங்களும் அதிலும் ஒற்றைக் கல் கொண்ட சிற்பங்கள் புகழ்ப்பெற்றவை ஆகும். 1987 ஆம் ஆண்டு மாமல்லபுரத்தின் கடற்கரை கோயிலை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரியங்களில் சேர்த்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நேற்று, மாமல்லபுரம் வடக்கு பகுதி மீனவர் குடியிருப்புக்கு அருகில், கடல் வெகுவாக உள்வாங்கியுள்ளது. இந்த கடல் அரிப்பின் காரணமாக, மணல் கடலுக்குள் சென்றுவிட்டதால், அங்கு சில புதிய சிற்பங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. இதில் பழங்காலத்து கல் கலசங்கள், தூண்கள், செங்கல்கள் போன்றவைகளும் அடங்கும்.
இவை அனைத்தும் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட ஆறு கோயில்களின் முக்கிய பாகங்களாக இருக்கலாம் என்று அங்கு வசிக்கும் மக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனைப் பார்த்த மக்கள் பலரும் அந்த சிற்பங்களைக் காண தற்போது அங்கு சென்று வருகின்றனர்.
மேலும் அங்குள்ள மீனவ மக்கள் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக கடல் அரிப்பு ஏற்பட்டதாகவும் நேற்று முதல் அங்கு சில சிற்பங்கள், தூண்கள், கோயில் கலசம் போன்றவைகள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்கு முன்பும் கடல் அரிப்புகள் ஏற்பட்டதாகவும் ஆனால், இவ்வளவு பாரம்பரியம் மிக்க பொருள்கள் இப்போது தான் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அங்கு வசிக்கும் மக்கள் சிலர் அந்தப் பகுதியிலிருந்து சில பொருள்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிகிறது.