மாவீரன் திரைப்படம் குறித்த தகவலை படத்தின் நடிகை அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டாக்டர்,டான் என வரிசையாக வெற்றித்திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படத்தின் மூலம் சற்றே சறுக்கலை சந்தித்தார். இந்நிலையில், இந்த சறுக்கலுக்கு நேரெதிராக வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இயங்கி வருகிறார்.
சிவகார்த்திகேயன் தற்போது, தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மடோனா அஸ்வின் முன்னதாக யோகிபாபு நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
வித்தியாசமான கூட்டணியாக சிவகார்த்திகேயன்-மடோனா அஸ்வின் கூட்டணி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், மாவீரன் திரைப்படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இதில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
ஏறத்தாழ, 40 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நின்றுவிட்டதாக செய்திகள் வந்தன. சிவகார்த்திகேயன் சில காட்சிகளை வைக்க வேண்டுமென கூறியதாகவும், இயக்குநர் மடோனா அஸ்வின் மாட்டேன் என்று கூறியதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
இதையும் படிங்க: விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்..! தைரியத்துடன் புரோமஷனில் களமிறங்கும் சமந்தா…
ஆனால், உண்மையில் மழைக் காரணமாகவே படப்படிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வராத நிலையில், தற்போது மாவீரன் திரைப்படத்தின் கதாநாயகி அதிதி சங்கர் படப்பிடிப்பில் உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவகாரத்திகேயன் நடிப்பில் இறுதியாய் வெளிவந்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், ‘மாவீரன்’ சிறந்த படமாக உருவாகவேண்டுமென படக்குழு உழைத்து வருகிறது.
முன்னதாக, மாவீரன் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.