சென்னை பட்டினம்பாக்கத்தில், 35.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் ‘மெரினா வர்த்தக மையம்’ அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடங்கியுள்ளது.
சென்னை பட்டினம்பாக்கத்தில், வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான, 25.16 ஏக்கர் நிலம் இருக்கிறது. இங்கு ஏற்கனவே இருந்த, அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளில் பெரும்பாலான கட்டடங்கள் 10 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டன.
இங்கிருந்து வெளியேற்றப்பட்டோருக்கு, இதே இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் போது வீடு ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இதன்பிறகு, இங்கு சுயநிதி முறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டது. இத்திட்டமானது விலை அதிகம் உள்ளிட்ட காரணங்களால் ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டது.
இதையடுத்து, இங்கு வணிக வளாகம் கட்ட, கடந்த ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. நிர்வாக குளறுபடிகள் காரணமாக, இந்த திட்டமும் முடங்கிப் போனது.
இதையும் படிங்க: உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம்; சிட்டாக பறந்து சாதனை!
இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பழைய திட்டத்தினை மாற்றி, ‘மெரினா வர்த்தக மையம்’ அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகளை வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் முடுக்கி விட்டனர்.
பட்டினம் பாக்கத்தில் உள்ள 25.16 ஏக்கர் நிலத்தில் மீன்வளத் துறையிடம் ஒரு பகுதி நிலமும், ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒரு பகுதி நிலமும் உள்ளது. இந்த நிலங்களை, சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இங்கு தமிழக அரசு அறிவித்தபடி, 35.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் ‘மெரினா வர்த்தக மையம்’ அமைக்கப்பட இருக்கிறது.
அலுவலகம், வணிக வளாகம், நட்சத்திர ஹோட்டல், கன்வென்ஷன் சென்டர் என பல்வேறு நவீன வசதிகள் அடங்கியதாக, இந்த வர்த்தக மையம் அமைய உள்ளது.
இந்நிலையில் இது குறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:
‘மெரினா வர்த்தக மையம்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. நிலத்தின் மொத்த பரப்பளவில் 3.24 மடங்குக்கு கட்டுமானப் பரப்பு இருக்கும்படி, புதிய கட்டடம் வடிவமைக்கப்படும். இதில், எந்தெந்த பயன்பாட்டுக்கு, எவ்வளவு பரப்பளவு ஒதுக்குவது என்பது முடிவாகியிருக்கிறது.
இதன் அடிப்படையில் விரிவான தொழில்நுட்ப அறிக்கை தயாரிக்கவும், வடிவமைப்பு, வரைகலை, வசதிகள் குறித்த விபரங்களை இறுதி செய்வதற்கான கலந்தாலோசகரை தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. அக்டோபர் மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, வடிவமைப்பு தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும். இதன் பின்பு, கட்டுமானப் பணிகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.