மெரினா மரப்பாலத்தை மாற்றுத் திறனாளிகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரியானதல்ல என கவிஞர் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்தால் ஆன பாதை திறந்துவைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு பலராலும் வரவேற்கப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்தில் அனைவரும் நடந்துச் செல்வது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கவிஞரும், திமுக-வின் பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் இந்த விமர்சனங்கள் குறித்து தன் பார்வையை முன்வைத்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:
மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்தில் எல்லோரும் நடந்து செல்வது குறித்த கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்தேன்.
இதில் எனக்கு சற்று மாறுபட்ட பார்வை இருக்கிறது. அந்த மரப்பாலத்தை அதிகமானோர் உபயோகித்தால் அது சேதமடைய வாய்ப்பிருக்கிறதா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர அதைமாற்றுத் திறனாளிகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரியானதல்ல.
அது மாற்றுத் திறனாளிகளைத் தனிமைப்படுத்தும் கொள்கையாகும். பார்க்கிங், டாய்லட் போன்றவற்றில் தனி ஏற்பாடுகள் என்பது சில பிரத்யேக தேவைகள் கருதிச் செய்யப்படுபவை. ஆனால் கடலுக்கு செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பாலம் இருந்தால் அவர்களோடு மற்றவர்களும் இணைந்து நடந்தால்தான் மாற்றுத்திறனாளி என்ற தனிப்பார்வை மறைந்து குறைபாடுகள் எனக் கருதப்படுபவை ” நார்மலைஸ் ” ஆகும்.
அந்த மரப்பாலத்தில் பத்து சக்கர நாற்காலிகளோடு சேர்ந்து எனது சக்கர நக்கர நாற்காலியும் ஊர்வலமாகச் செல்வதையோ அல்லது என் சக்கர நாற்காலி மட்டும் தனியாகச் செல்வதையோ நான் விரும்பமாட்டேன். நான் நடக்கிற, ஓடுகிற மனிதர்களுடன் இணைந்து செல்லவே விரும்புகிறேன். அங்கு நடப்பவர்களுக்கு இணையாக நானும் நடக்க ஒரு மோட்டார் பொருத்திய தானியங்கி சக்கரநாற்காலியைகூட சமீபத்தில் வாங்கினேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சில கூடுதல் வசதிகள் தேவை. ஆனால் அது ஒருபோதும் அவர்களை தனிமைப்படுத்துவதாக இருக்கக் கூடாது. ‘நரகத்திற்குப் போகும் பாதை நல்லெண்ணங்களால் ஆனது’ என்ற பொன் வாசகத்தைதான் இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘இனி அனைவரும் கடல் பார்க்கலாம்’; சம வாய்ப்பை வழங்கும் மெரினா – ஒரு பார்வை