மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்று இரவே பூஜை முடிந்ததும் நடை மூடப்பட்டது. இந்நிலையில் இன்று மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இன்றைய தினம் சாமியை தரிசிக்க 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை முதல் எப்போதும் போல், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் மற்றும் கலச பூஜை நடைபெறும்.
பிறகு மதியம் 1.30 மணி அளவில் நடை சாத்தப்படும். அதன் பின்பு மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன செய்வதற்கான அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது.
பொங்கல் தொகுப்பு எப்படி? மாநில அந்தஸ்து நிலைப்பாடு என்ன? – பதிலளித்த முதலமைச்சர்..