தாடி வளர்ப்பதால் மட்டுமே ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்துவிட முடியாது என ராகுல் காந்தியை மராட்டிய மாநில அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி சவரம் செய்யாமல் தாடியை வளர்க்க ஆரம்பித்தார். இந்நிலையில், அதே தோற்றத்துடன் தற்போது நாடாளுமன்றத்துக்கும் சென்று வருகிறார். இதனை வைத்து ராகுல் காந்தியை மராட்டிய மாநில அமைச்சர் சுதீர் முன்கங்திவார் விமர்சனம் செய்துள்ளார்.
மராட்டிய மாநிலம், புனேவில் அம்மாநில அமைச்சர் சுதீர் முன்கங்திவார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தொழிலதிபர் கெளதம் அதானி குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியதாக கூறியவர், அதானி குழுமத்துக்கு முதன் முதலில் அரசு சார்பில் பணி ஒப்பந்தம் வழங்கியது யார் என்பது ராகுலுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.
1993 ஆம் ஆண்டு குஜராத்தில் முந்த்ரா துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு முதல் முறையாக வழங்கப்பட்டதாகவும், அப்போது குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததாகவும் தெரிவித்த அவர், ஒரு சதுர மீட்டர் நீளத்தை 10 பைசா என்ற விலையில் அதானி குழுமத்துக்கு காங்கிரஸ் அரசு அளித்ததாகவும் கூறினார்.
மேலும் அதானி சர்ச்சையை வைத்து காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்ப முயல்கிறது. தாடி வளர்ப்பதால் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்துவிட முடியாது. தனது தகுதிகளை உயர்திக் கொள்வதன் மூலம் தான் உயர் பதவிகளுக்கு வர முடியும் என ராகுல் காந்தியை அமைச்சர் சுதீர் முன்கங்திவார் விமர்சனம் செய்தார்.
கே.ஜி.எஃப்-ஐ ஓரங்கட்டிய பதான்; வெளிவந்த ரிப்போர்ட்!