முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 26 ரன்கள் முன்னிலை வகித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், அந்த ஆணி முதல் நாள் ஆட்டத்திலேயே 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பிறகு, களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 20 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நேற்றைய ஆட்ட முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. ஆட்டக்களத்தில் ரோஹித் சர்மா 55 ரன்களுடனும், அஷ்வின் ரன்களேதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நிதானமாக ஆடி வந்த இருவரில், அஷ்வின் 23 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, இதையடுத்து வந்த புஜாரா 7 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதன்பிறகு விராட் கோலி களத்தில் இறங்கினார். ஒருமுனையில் இரு விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார்.
உணவு இடைவேளை விடப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 26 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ரோஹித் சர்மா 85 ரன்களுடனும், விராட் கோலி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இருபது ஓவர் மகளிர் உலகக் கோப்பை; இன்று முதல் நாள்!