ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார கூட்டத்தில் சிறுமியிடம் ஒரு நபர் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால், அரசியல் கட்சிகள் அப்பகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர், நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டம் நேற்று வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் ஒரு நபர் சிறுமியிடம் அத்துமீறியதாக சிறுமியின் தாயார் ஆவேசமடைந்து அவரைத் தாக்க முயன்றார். அப்போது அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுகவினர் அந்தத் தாயை சமாதானப்படுத்திய நிலையில், அவர் சிறுமியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார கூட்டத்தில் சிறுமியிடம் ஒரு நபர் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருபது ஓவர் மகளிர் உலகக் கோப்பை; இன்று முதல் நாள்!