சென்னை உயர்நீதிமன்றம் மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்தது.
சென்னையின் புகழ்பெற்ற இடங்களுள் ஒன்று, மாயாஜால். இங்கு திரையரங்குகள் இயங்கி வருகின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாயாஜாலை ஒட்டி நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டியிருந்த 2 ஏக்கர் இடம், வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசாங்கத்துக்கு சொந்தமான இந்த இடத்தை குத்தகைக்கு எடுக்க மாயாஜால் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பமானது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில், இந்த தகவலை மறைத்து 2 ஏக்கர் இடத்திற்கு பட்டா கேட்டு காஞ்சிபுரம் தாசில்தாருக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.
இந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மாயாஜால் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 2015-ம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 2 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் தாசில்தார் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ”குறிப்பிட்ட நிலம் தொடர்பான பல உண்மை தகவல்களை, தனி நீதிபதியிடம் மறைத்து பட்டா பெற்றுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும்,” என, வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : அதிமுக பொதுக்குழு குறித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி