ஐபிஎல் தொடரில், நேற்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியின் மூலமாவது மும்பை தன் முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எண்ணம் பலரிடத்திலும் இருந்தது.
நேற்றையப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், லக்னோ அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். டி காக் அவர்கள்10 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த மணிஷ் பாண்டே 22 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அணியின் ஏனைய வீரர்களும், சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை, மும்பை பந்துவீச்சாளர்களிடம் தர, ஒருவர் மட்டும் ‘நான் எனது விக்கெட்டை இழக்க மாட்டேன்’ என்ற படி விளையாடிக்கொண்டிருந்தார். அவர்தான், லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்.
மிகவும் சிறப்பாக விளையாடிய அவர், மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அவர் நான்கு சிக்ஸ்ர்களையும், 12 பவுண்டரிகளையும் விளாசினார். உனத்கட் ஓவரில் தொடர்ந்து ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்த கே.எல்.ராகுல், சிக்சரின் மூலம் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்த சீசனில் கே.எல்.ராகுல் விளாசும் இரண்டாவது சதம் இதுவாகும். இரு சதங்களும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிக்கப்பட்டதே! கே.எல்.ராகுலின் தனி போராட்டத்தால், லக்னோ அணியானது இருபது ஓவர்களின் முடிவில் 168 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியானது 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், இந்த தொடரின் ஏனையப் போட்டிகளில் சொதப்பியதைப் போலவே நேற்றையப் போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் சொதப்பியது.
ரோஹித் சர்மா 39 ரன்கள், திலக் வர்மா 37 ரன்கள் அடித்தார். பொல்லார்டு 19 ரன்கள் அடித்தார். இவர்களைத் தவிர எவரும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டி அடிக்கவே இல்லை. ஆதலால், மும்பை இந்தியன்ஸ் அணியானது பரிதாபமாக, 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்த 15 ஆவது ஐபிஎல் தொடரில், இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணி சார்பில் முன்னாள் மும்பை அணி வீரர் க்ருணால் பாண்டியா மூன்று விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
லக்னோ அணியின் வெற்றிக்கு காரணமான கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கீரன் பொல்லார்டு : ரசிகர்களை உருக்கும் வீடியோ!