மேற்கிந்தியத் தீவுகள் அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளின் கேப்டன் கீரன் பொல்லார்டு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவினை அவர் நேற்று அறிவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டன் கீரன் பொல்லார்டு. இவர் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் தற்பொழுது ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அந்த வீடியோவில், நன்கு கவனமாக ஆலோசித்த பிறகுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் என்னுடைய ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன் என்று அவர் பேசியுள்ளார்.
இளம் தலைமுறையினர் பலருக்கும் இருந்தது போல எனக்கும் 10 வயதில் இருந்தே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருந்தது. அதைப்போலவே வாய்ப்பு கிடைத்து 15 வருடங்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 50 ஓவர் மற்றும் 20 போட்டிகளில் விளையாடிள்ளேன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய சிறுவயது நாயகன் பிரையன் லாராவின் தலைமையில், 2007ல் முதன்முறையாக நான் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது எனக்கு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. அந்த மரூன் நிற சீருடையை அணிந்துகொண்டு அவ்வளவு பெரிய ஜாம்பவான்களுடன் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் செய்யும் பொழுது ஆன்மரீதியாக மனமுவந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2007ல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி வந்த கீரன் பொல்லார்டு, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் அவருடைய இரண்டாவது தாயகமான இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி தொடரில் விளையாடி இருந்தார்.
பொல்லார்டு இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகளிலும், 101 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 2706 ரன்களை குவித்துள்ள அவர் சராசரியாக 26 ரன்களை வைத்துள்ளார். மேலும், 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இருபது ஓவர் போட்டிகளில் இதுவரை 1569 ரன்களும், 25 ரன்களை சராசரியாகவும் அவர் வைத்துள்ளார். 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இதையும் படியுங்கள், கொரோனாவை விட வீரியமான டெல்லி அணி; பரிதாபத்தில் பஞ்சாப்!