சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லவிருந்த மின்சார இரயில், சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடை மீது ஏறி நின்றது. இதனால் பயணிகள் தப்பி ஓடினர்.
நேற்று மாலை 4.25 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு செல்லவிருந்த மின்சார இரயில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென தடம் புரண்டது. இதனையடுத்து, இரயில் தடுப்பின் மீது மோதி பயணிகள் செல்லும் நடைமேடை மீது ஏறியது. இரயிலானது அங்குள்ள கடையின் மீது மோதி நின்றது. இன்ஜின் அறையில் இருந்த ஓட்டுநர், உடனே சுதாரித்துக் கொண்டு இரயிலில் இருந்து எகிறி வெளியே குதித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே காவல் துறையினர் என அனைவரும் விபத்து நடந்த பகுதிக்கு வந்தனர். மேலும் மீட்டப் பணிகளை மேற்கொண்டு விசாரித்தனர். சிறிது காயத்துடன் ஓட்டுநர் உயிர் தப்பியதாகவும் வேறு யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லையெனவும் ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். இரயில் நிலையத்தில் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படும்.
ஆனால், நேற்று விடுமுறை நாள் என்பதால் பயணிகளின் வரத்து மிகக் குறைவாகவே இருந்தது. இதனால், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்டதனை அடுத்து சில மணிகள் இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு மீண்டும் இரயில் சேவை தொடங்கப்பட்டது.
அந்த இரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இருந்த நிலையில், நேற்றே 10 பெட்டிகள் தனியே பிரித்து அப்புறப்படுத்தப்பட்டன. நடைமேடை மீது ஏறிய பெட்டி, நேற்று 6.30 மணி அளவில் மீட்கப்பட்டது. எனினும் என்ஜின் பெட்டி நடைமேடை மேற்கூரையை இடித்து நின்றதால் அதனை அப்புறப்படுத்த காலதாமதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் அடிப்படையில், ரயில்வே நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்த புகாரின் பேரில், சென்னை எழும்பூர் நிலைய காவல் துறையினர், ஓட்டுனரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 279 பிரிவின் படி, உயிருக்கு அச்சுறுத்தம் வகையில் அதிவேகமாக இரயிலை இயக்கியது மற்றும் ரயில்வே சட்டம் 151, 154 பிரிவுகளின் படி, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்களை இயக்குதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள், மின்வெட்டு பிரச்சனையால் ஆட்சி பறிபோனதை முதல்வர் நன்றாகவே அறிவார் – ஓ.பன்னீர்செல்வம் சூசகம்!