தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் விரைவில் திராவிட மாடல் ஆட்சி மலரும், புதுச்சேரி முதலமைச்சர் நல்லவராக இருந்தால் போதாது வல்லவராகவும் இருக்க வேண்டும். ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் அடங்கி ஒடுங்கி புதுச்சேரியில் ஆட்சி நடக்கிறது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமார் இல்ல திருமண விழா புதுச்சேரி எல்லையில் நடைபெற்றது. விழாவில் தம்மிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு மாலை மற்றும் மாங்கல்யம் எடுத்துகொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வருகிறார்.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது.
புதுவை என்றால் கலைஞர் மட்டுமல்ல அவரது மகனான எனக்கும் பாசம் அதிகம் வந்துவிடும். போட்டி பிரச்சனைகள் இருந்தால் தான் கட்சி வளரும். போட்டி இருந்தாதான் கழகம் வளரும். புதுச்சேரியில் போட்டி இருப்பது குறித்து அமைச்சர் பன்னீர் உத்தம புத்திரன் மாதிரி பேசினார். அவர் நிலைமை கடலூரில் என்ன. அதை நான் பெரிதுபடுத்தவில்லை. போட்டி இருக்கனும், பொறாமை இருக்க கூடாது.
தமிழகத்தில் தற்போது உதய சூரியன் மலர்ந்துள்ளது. இதே போல் புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி வரவேண்டும். அந்த ஆசை எனக்கும் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் மக்களுக்காக நடைபெறவில்லை. தற்போதைய புதுச்சேரி முதலமைச்சர் உயர்ந்த மனிதர் தான் உயரத்தில் மட்டும். ஆனால் அடிபணிந்து இருக்கிறார். நல்லவராக இருந்தால் போதாது. நல்லவர் வல்லவராகவும் இருக்க வேண்டும். ஆனால் இல்லை. ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் ஆட்சி நடக்கிறது என்றால் வெட்கப்பட வேண்டாமா.
இந்நேரம் வெகுண்டெழுந்திருக்க வேண்டும். இது புதுச்சேரி மாநிலத்திற்கு ஒரு இழுக்காக உள்ளது. உறுதியாக மதவாத ஆட்சி உருவாகிவிட கூடாது என கண்ணும் கருத்ததுமாக இருக்க வேண்டும். புதுச்சேரி மாநில நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், அடுத்த வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும். புதுச்சேரியில் விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எந்த ஆட்சியாக இருந்தாலும் உழைக்க வேண்டும் என்றார்.