பெயரளவுக்கு 5 கிலோ அரிசியையும், ரொட்டி பாக்கெட்டுகளையும் கொடுப்பதால் பாதிக்கபட்டவர்களுக்கு எந்த தீர்வையும் ஏற்படுத்தாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் சேதமடைந்த படகுகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “மாண்டஸ் புயலால் சென்னை முழுவதிலும் உள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர், விசை படகுகள், கட்டுமரம், மற்றும் மீன்பிடி சாதனங்கள் என அனைத்தும் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், மாண்டஸ் புயல் காரணமாக சேதம் அடைந்துள்ள காசிமேடு மீனவர்களின் படகு உரிமையாளர்களுக்கு 20 லட்சமும், பகுதியளவில் சேதமடைந்த படகின் உரிமையாளர்களுக்கு 10 லட்சமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தேர்தல் நேரத்தில் திமுக அரசு மீன்வர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் ஆன போதிலும் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ஜெயக்குமார், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நாளிலிருந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை என்றும் அதனால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை கணக்கிட வேண்டும் என்றும், நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் விதம் 20 நாட்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யாமல், பெயரளவுக்கு 5 கிலோ அரிசியையும், ரொட்டி பாக்கெட்டுகளையும் கொடுப்பதால், அவர்களுக்கு எந்த தீர்வையும் ஏற்படுத்தாது எனவும் கூறினார்.
பெரும் புயலில் இருந்து அரசின் நடவடிக்கையால் சென்னை நகரம் காப்பாற்றப்பட்டுள்ளது; ஸ்டாலின் பெருமிதம்