செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? அப்படி இருக்கிறதென்றால் அதற்கான அடுத்த படிநிலைகள் என்ன? என்றும், இப்படியான ஆய்வுகள் ஏன் நடந்துக்கொண்டிருக்கிறது என்றும் யோசித்துப்பார்த்தால்.. அறிவியல் வளர்ச்சி என்ற பதில் கிடைத்தாலும், மற்றொரு கோணத்தில் மக்கள் தொகைப்பெருக்கம் என்ற பதிலும் கிடைக்கிறது. அது உண்மையும் கூட!
மக்கள் தொகைப்பெருக்கம் விவசாய நிலங்களின் மீதும் தனது தாக்கத்தை நிச்சயம் நிகழ்த்தும். அவ்வாறாக தாக்கத்தை நிகழ்த்தினால், நிகழ்த்தும்போது விவசாயத்தின் நிலை என்ன? இப்படியான கேள்விகள் எழும்போதுதான் அதற்கான பதில்களும் கிடைக்கும். அப்படியாக இத்தாலியில் உள்ள ஒருவருக்கு மேற்கூரிய கேள்விகள் உள்ளுக்குள் எழ அதற்கு கடலுக்குள் விவசாயம் செய்தால் என்ன? என்ற கேள்வியே பதிலாய் கிடைத்தது.
ஆம்! கடலுக்குள் விவசாயம் செய்யும் யுக்தியை இத்தாலியில் உள்ள ஃபெட்ரிக்கோ மற்றும் அவரது குழுவினர் உருவாக்க நினைத்து, அவ்வுருவாக்கத்தை சாத்தியப்படுத்தவும் செய்துள்ளனர். கடலுக்கு அடியில் சிறிய வகையிலான சூழலியல் வடிவமைப்பை ஏற்படுத்தி அச்சூழலில் இவர்கள் செடிகளை வளர்த்து வருகின்றனர். இதற்கு நிமோ தோட்டம் என்று பெயரிட்டுள்ளனர்.
செம்புற்றுப்பழங்கள் (strawberry) , அவரையினம் போன்றவற்றையும் கடலுக்கு அடியில் இவர்கள் வளர்த்து வருகின்றனர். தற்போது இத்தகைய நிமோ தோட்டத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்!