கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழா தான் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.
திருநங்கைகளுக்கு என்று சிறப்பாக இந்தக் கூத்தாண்டவர் கோவில் கருதப்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருநங்கைகள் இந்த கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து தங்கியிருந்து விழாவில் கலந்துக் கொள்கின்றனர். பின் அரவானை தரிசித்து ஆடி பாடி கொண்டாடி அழுதும் செல்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்துள்ளதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் வரும் கூட்டத்தை விடவும் இப்போது பல ஆயிரக்கணக்கில் திருநங்கைகள் மற்றும் பொது மக்கள் இந்தக் கோவிலுக்கு வருகின்றனர்.
முக்கிய நிகழ்வாக திருநங்கைகள் அரவானை நினைத்து வழிபாடு செய்து தாலிக் கட்டிக்கொள்ளும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. மேலும் இதைத்தொடர்ந்து நாளை 20.04.2022 தேர்த்திருவிழாவும் அரவானை பலியிடுதல் மற்றும் திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்வுகளும் நடைபெறும். திருநங்கைகள் இப்படி செய்துக் கொள்ள முக்கிய காரணமாக மகாபாரத கதையில் வரும் ஒரு நிகழ்வு கூறப்படுகிறது.
மகாபாரத யுத்தத்தில், அர்ஜுனனின் மகன் அரவானை பலிக் கொடுப்பதால் போரில் வெல்வதற்காக இந்த முடிவை பாண்டவர்கள் எடுக்கின்றனர். அரவானும் இதற்கு ஒப்புக்கொள்கிறான். இருப்பினும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறான். எனக்கு இல்லறவாழ்வில் ஈடுபட வேண்டும் என்று கூறுகிறான். நாளை இறக்க போகும் ஒருவனுக்கு யார் பெண் தருவார்கள் என்பதால் கிருஷ்ணரே மோகினி உருவம் எடுத்து பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்துகொள்கிறார். இல்லற வாழ்விலும் ஈடுபடுகின்றனர். இதை நினைவுகூரும் வகையில் கூத்தாண்டவர் கோவிலில் தாலிகட்டி அதற்கு அடுத்த நாள் அரவான் பலிகொடுக்கப்பட்டு, ஒப்பாரி வைத்தும் தாலி அறுத்தும் வெள்ளை சேலை உடுத்தியும் கொள்கின்றனர் திருநங்கைகள். தர்மர் பட்டாபிஷேகம் கடைசி நிகழ்வாக நடத்தப்பட்டு திருவிழா முடிவடைகிறது.
திருநங்கைகள் அரவானை மனதார நினைத்து தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வானது இன்று நடைபெறுகிறது.