கேரளாவில் முஸ்லிம் மாணவியை மேடைக்கு அழைத்தற்காக விழா ஏற்பாட்டாளர்களை முஸ்லிம் அறிஞர் ஒருவர் திட்டிய விவகாரத்தில், மதத் தலைவர்கள் போல் வேஷம் போடும் நபர்களின் விருப்பத்திற்கு நமது மகள்களை விடப் போகிறோமா என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு சையது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார். இதற்கு அந்த விழாவில் கலந்து கொண்ட சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா சங்கத்தின் மூத்த மதக் குரு அப்துல்லா முசலியர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்துல்லா முசலியர் அந்த நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்தது யார்? நீங்கள் இதை மீண்டும் செய்தால், உங்களுக்கு நான் யாரென்று காட்டுவேன். அத்தகைய பெண்களை இங்கு அழைக்காதீர்கள். உங்களுக்கு சமஸ்தா விதிகள் தெரியாதா? பாதுகாவலை இங்கே அழைக்கவும், நீங்கள் தான் மாணவியை அழைத்தீர்களா? எங்களை இங்கே உட்கார வைத்து தேவையற்ற செயல்களை செய்யாதீர்கள். இது புகைப்படங்களில் வராதா? என தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மதக்குருவுக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக கேரள கவர்னர் கடுமையான கேள்விகளை கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறுகையில், இது பற்றி பேசப்பட்டிருந்தால், நான் பேச வேண்டிய அவசியமில்லை. யாரும் பேசாதது ஆச்சரியமாக இருக்கிறது. மதத் தலைவர்கள் போல் வேஷம் போடும் நபர்களின் விருப்பத்திற்கும், எண்ணத்திற்கும் நமது மகள்களை விட்டுவிடப் போகிறோமா. நம் மகள்கள் அவமானப்படுத்தப்படும்போதும், அவமதிக்கப்படும்போதும் அமைதியாக இருப்பது பாவமாகவே கருதுகிறேன் என தெரிவித்தார்.
ஆரிப் முகமது கான் சமீபத்தில் கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மேலும், இவர் ஹிஜாப் சர்ச்சையிலும் முஸ்லிம் பெண்ககளுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து ராஜபக்சவின் மகன் அதிரடி கருத்து!