கேரளாவில் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை கொடுத்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக வாகனம் ஓட்டிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கொச்சி காவல்துறையினர் அறிவித்தனர்.
அதன்படி திரிபுனித்துரா காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களை பிடித்தனர். மேலும் அவர்களுக்கு நூதன முறையில் தண்டனையும் வழங்கினர்.
காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவர்களுக்கு பேப்பரையும் பேனாக்களையும் கொடுத்துவிட்டு தரையில் அமர வைத்து, ‘இனி நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி செல்ல மாட்டேன்’ என எழுதும்படி நூதன தண்டனை கொடுத்தனர். இதில் என்ன இருக்கிறது என்றால், அவர்கள் அதை ஒருமுறை எழுதவில்லை ஆயிரம் முறை எழுதியுள்ளனர்.
தனியார் பேருந்து ஓட்டுனர்கள் 12 பேருக்கும், கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர்கள் 2 பேருக்கும் பள்ளி வாகன ஓட்டுனர்கள் 2 பேருக்கும் இந்த நூதன தண்டனை வழங்கப்பட்டது.
வண்டலூர்: கணவன், மனைவியை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள் – காவல்துறை வலைவீச்சு!