‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் உள்ள பாடல் குறித்து திரைப்பாடலாசிரியர் கவிஞர் தாமரை குறித்து பேசியுள்ளார்.
‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெறும் ‘மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே’ பாடல் பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது. சமூகவலைதளம் முதல் ரியல்தளம் வரை இப்பாடல் பலரிடத்திலும் மணந்துவருகிறது.
இந்நிலையில், பாடலாசிரியர் தாமரை இப்பாடல் குறித்து தனது இணையதள பக்கத்தில் பதிவொன்றை பதிந்துள்ளார்.
இதையும் படிங்க: இப்படித்தான் பொன்னியின் செல்வனின் பாடல் உருவானதா?
அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. போன ஆண்டே எழுதிப் பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது. இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று!
பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை, நாட்டை, உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு. கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், ரகுமான் எனக்குக் கொடுத்த சுதந்திரம் பெரிது!
படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் ‘பிரிவு’ ஒரு வலுவான உணர்வல்லவா ?? . இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம்.
முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்! விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்.
இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.