முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அருகே அமையவுள்ள அவரின் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை மெரினாவில் அமைக்கப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அருகில், கடலில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது.
இந்த நினைவுச் சின்னமானது, ரூ.80 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும் , அதிலும் கடலில் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆதலால், இந்த நினைவுச் சின்னத்திற்கு சென்றடையும் வகையில் 290 மீட்டர் தூரத்திற்கு கடற்கரையிலும், 360 மீட்டர் தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: நெடுஞ்சாலைத் துறை டெண்டர் விவகாரம்; எடப்பாடிக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்
இந்த திட்டத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக தமிழக அரசு காத்திருந்தது.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுமக்களிடம் இந்த திட்டம் தொடர்பாக கருத்துகளை கேட்ட பின்னர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.