எடப்பாடி பழனிச்சாமி மனு மீதான விசாரணை செப்டம்பர் 26-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாக கூறி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அடிச்சிகாட்டுங்கடா பாப்போம் யாரு பெரிய ஆளுனு
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதால், அவர்களே விசாரணையை தொடரட்டும் எனத் தெரிவித்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என் ஆர்.இளங்கோ அனுமதி கோரினார். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் கவுதம், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.