மத்திய அரசு இந்தி மொழியை நாடு முழுவதும் பரவிடச் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தித் திணிப்பு குறித்து, காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தித் திணிப்பு பிரச்சனையே தீராத நிலையில், சமஸ்கிருத மொழியை மக்கள் பேச வேண்டும் என மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இது பற்றிய கருத்து ஒன்றை, திமுக எம்.பி., கனிமொழி பேசியுள்ளார்.
“மத்திய அரசு, மக்கள் சமஸ்கிருத மொழி பேச கோடி கோடியாய் செலவு செய்கிறது. ஆனால் அம்மொழியை பேச ஆள் இல்லை” என்று திமுக எம்.பி., கனிமொழி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் முத்தரையர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திமுக எம்.பி.,யும், அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், இங்கு கூடியிருக்கும் அனைவரும் எங்கள் உரிமை மற்றும் எங்கள் குரல் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் எல்லோரும் ஒன்று தான். தமிழ் இனம் மட்டுமே நம் எல்லோரையும் இணைத்து வைத்திருக்கிறது என்பது மிகச் சரியான உண்மை. அதன் அடிப்படையில் தான், இதை விட பெரிய எதிரியையும் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
தமிழர்களுடைய தமிழ் மொழி தொன்மையும், பழமையும் வாய்ந்தது. மக்கள் சமஸ்கிருத மொழி பேச, மத்திய அரசு கோடிக் கணக்கில் செலவு செய்து வருகிறது. ஆனால், அம்மொழியை பேசத் தான் ஆள் இல்லை. கோயிலில் வேண்டுமென்றால் சமஸ்கிருத மொழியில், பூஜை வழிபாடுகள் செய்யலாம். ஆனால், இம்மொழியை பேச ஆயிரம் பேருக்கு மேல் ஆளே இல்லை. தொன்மையும், தொடர்ச்சியும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான் என்று கனிமொழி பேசினார்.
திமுக கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அது பற்றிய விளம்பரங்கள் காணும் இடமெல்லாம் உள்ளது. திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை மக்கள் உற்று நோக்குவதாகவும், என்றைக்குமே ஓட்டுக்காக நாங்கள் அரசியல் செய்தது இல்லை என்றும் கனிமொழி பேசினார்.
கோவில் கோவிலாக செல்லும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி!.. கல்யாண வைபோகமா?