‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ளனர். மேலும், விக்ரம் திரைப்படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க இப்படம் லோகேஷ் ஸ்டைலில் உருவாகியுள்ளதாக படக்குழுவிடமிருந்து தகவல்கள் வந்துள்ளது.
இதுவரை வெளியான டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற இப்படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வருகிற ஜூன் 3ம் தேதி அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது.
சில நாட்களுக்கு முன்பு விக்ரம் படத்திலிருந்து பத்தல பத்தல என்ற பாடல் வெளியானது. அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த இப்பாடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. செம ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் இப்பாடல் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
இப்பாடல் வரிகளில் ஒரு இடத்தில் ஒன்றியத்தின் தப்பால ஒன்னியும் இல்ல இப்பால என்ற ஒரு வரி இடம்பெற்றுக்கும். எனவே கமல் மத்திய அரசை தாக்கித்தான் இந்த வரிகளை உருவாக்கினார் என்று சில சர்ச்சைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் வருகை தந்த ஒவ்வொரு பிரபலங்களும் கமல்ஹாசன் குறித்தும், விக்ரம் படம், பாடல்கள் மற்றும் படத்தில் நடித்த பிரபலங்கள் குறித்தும் பேசியுள்ளார்கள்.
இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய்சேதுபதி, சிலம்பரசன், நரேன், உதயநிதி, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. சாண்டி மாஸ்டரின் நடனத்தோடு நிகழ்ச்சி ஆரம்பித்தது. இவ்விழாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு:
பா. ரஞ்சித் :
தான் அடுத்து கமல்ஹாசன் அவர்களை வைத்துப் படம் இயக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும், மதுரை பின்னணியில் இப்படம் உருவாகும் என்று கூறியுள்ளார். இதற்கு தொகுப்பாளினி டிடி ‘ வேஷ்டியை மடிச்சு கட்டிகிட்டு ஒரு படமா? என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பா. ரஞ்சித் ‘ ஏன் கோட் சூட் போட்டுக்கிட்டு இருக்க கூடாதா ‘என்று கூறியுள்ளார். மேலும், சிலம்பரசனுடனும் அரசியல் குறித்தான பேச்சுகள் நிறைய நடக்கும், அவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் :
கமல் சாரை மிரட்டி விக்ரம் படத்தை வாங்கி விட்டீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். யார் மிரட்டினாலும் கமல் பயப்படக்கூடியவர் கிடையாது என்று கூறியுள்ளார்.
அவருடன் சேர்ந்து படப்பிடிப்புக்கு இடையில் அமர்ந்து பேசியதெல்லாம் என் பாக்கியம். ‘கமல் 60’ நிகழ்ச்சியில் அவருடன் படம் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். அதே போல, உங்களுடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. உங்கள் எழுத்தின் மிகப் பெரிய ரசிகன் நான். அது நடக்க வேண்டும் என இயற்கையை வேண்டிக் கொள்கிறேன் என்றவர் படக்குழுவை குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தவர் படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
அனிருத்:
விஜய்யின் மாஸ்டர் 50% லோகேஷ் படம். கமலின் விக்ரம் 100% லோகேஷின் சம்பவம் என கூறினார்.
மேலும், ‘பத்தல பத்தல’ பாடலுக்கான ரெக்கார்டிங் நடந்த இரண்டு நாட்கள் மறக்க முடியாது. ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் அனுப்பி விட்டார். தமிழில் பாடி முடித்ததும் தெலுங்கின் வரிகளை பார்த்து இதில் பிழை இருக்கிறது என சொல்லி அவரே சரி செய்து உடனே பாடினார்.
எந்தவொரு இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு படத்தின் வெற்றி குறித்து பேச மாட்டேன். ஆனால், இந்த படம் நிஜமாகவே உலகம் முழுக்க வெற்றி பெறும்” என்றவர், படத்தில் இருந்து ‘விக்ரம்’ பாடலையும் பாடினார்.
சிம்பு :
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிலம்பரசன் கலந்து கொண்டார். “வாழ்க்கையில் என் அப்பா எனக்கு குரு. திரையில் கமல் தான் எனக்கு குரு. அப்போதெல்லாம் நான் ஐந்து மணிக்கு எழுந்திருக்க மாட்டேன். ஆனால் கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தின் பிரச்னையின் போது அதிகாலையில் எழுந்து அன்று நாள் முழுக்க கமல் சாருடன் இருந்ததை மறக்கவே மாட்டேன். இந்த படத்தின் ட்ரைய்லரை பார்த்து விட்டு சொல்கிறேன். நிச்சயம் படம் வெற்றி பெறும். இத்தனை நடிகர்களை வைத்து படம் இயக்குவது எளிது கிடையாது. லோகேஷ் அதனை செய்திருக்கிறார். விஜய்சேதுபதி என் நண்பர். மலையாளத்தில் பகத் போல தமிழில் விஜய்சேதுபதி.
அனிருத் என் சிறு வயது நண்பன். அனி பாடல்கள் வெற்றி பெற பின்னால் அவருடைய பெரிய உழைப்பு உள்ளது. இப்பொழுது எல்லாம் பான் இந்தியா என பேசி கொண்டிருக்கிறார்கள். கமலுடைய ‘மருதநாயகம்’ பார்த்தால் அந்த பேச்சு வராது என நினைக்கிறேன” என்று முடித்துக்கொண்டார்.
நான் எப்போதும் இறைவனுக்கு வணக்கம் என்று சொல்றேன்.. ஆனால், ஆண்டவரே இங்கு தான் இருக்கிறார் என்று கூறினார்.
பார்த்திபன் :
அதிமுக அமைச்சர்கள் கூட அம்மாவை பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அனிருத் அம்மா அனிருத்தை 3 நாட்களாக பார்க்காமல் இருந்துள்ளார். அந்த அளவிற்கு அவர் கடின உழைப்புடன் வேலை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்
லோகேஷ் கனகராஜ் :
எங்களுடைய முழு பெஸ்ட்டையும் விக்ரம் படத்தில் கொடுத்துள்ளோம் . இது உண்மையான வெற்றியாக இருக்கும் என நம்புகிறோம். நன்றி.
கமல்ஹாசன் :
அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் மு.க.ஸ்டாலின் எப்படி என்று கேட்பார்கள். ரஜினி திரைத்துறையில் என்னுடைய போட்டியாளராக இருந்து கொண்டு நண்பராக இல்லையா. அது போல தான் என்று கூறியுள்ளார்.
மேலும், ரஞ்சித் அவர்கள் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டு சென்றிருக்கிறார் அது விரைவில் நடக்கத்தான் போகிறது. அதே போல் லோகேஷ் கனகராஜ் உடன் வெற்றி கூட்டணியும் தொடரும் என்றும் பேசியுள்ளார் கமல்.
எப்படி இருக்கும் இந்த வாரம் – இதோ, துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!